பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

briyani business
பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு

Briyani: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 7 ஸ்டார் பிரியாணி உணவகத்தில், தூந்தரீகம் பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோருடன் கடந்த செப்டம்பர் 8ம் தேதி பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றைச் சாப்பிட்டார்.

வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி லோசினி சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆரணி நகர காவல்நிலையத்தில் தாய் பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் உணவகத்தை தரமாக பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவு காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, 40 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில் கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆரணியில் 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உணவகத்தில் சாப்பிட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீரே 30 பேரின் உடல்நலபாதிப்புக்கு காரணம் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு !