கடலில் விழுந்த இந்தோனேசிய விமானம்?

இந்தோனேசியாவில் 56 பயணிகள், ஆறு பணியாளர்களுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு, ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் புறப்பட்டுள்ளது. 

இந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 56 பயணிகள் பயணம்செய்துள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அதிதா இராவாட்டி கூறுகையில், “போயிங் 737-500 விமானம் ஜகார்த்தாவிலிருந்து மதியம் 1:56 மணிக்குப் புறப்பட்டது. கட்டுப்பாட்டு அறையுடன் மதியம் 2:40 மணியளவில் தொடர்பை இழந்தது. விமானத்தில் 56 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர்” எனத் தெரிவித்தார்

மேலும், வயர்கள், கிழிந்த ஜீன்ஸ் உள்பட சில பொருள்கள் கடலில் மிதப்பதாக அந்நாட்டு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏழுந்துள்ளது.