நாகர்கோவில்: A world record by pulling a 13.5 ton lorry 110 meters with a rope. நாகர்கோயில் அருகே உடற்பயிற்சியாளர் ஒருவர் 13.5 டன் லாரியை கயிறு கட்டி 110 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் உடற்பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழகத்துக்குப் பெருமையை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், கண்ணன் ஒரு புதிய சாதனையை படைக்க விரும்பினார். பொதுவாக இருமுனை கயிறு மூலம், ஒரு கையால் கயிற்றால் கட்டப்பட்ட கனரக வாகனத்தை இழுத்தும், மற்றொரு கையால் எதிர்முனையில் உள்ள தூணில் கட்டப்பட்ட கயிற்றைப் பிடித்தும் இழுப்பார்கள்.
ஆனால், கண்ணன் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டி, ஒரு முனைக் கயிறு மூலம் கனரக வாகனத்தை 40 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைத்தார். தற்போது உலக சாதனை முயர்சியாக 14 டயர்களுடன் 13.50 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் தூரம் இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலை அடுத்த தோவாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிரே புதிய தேசிய நெடுஞ்சாலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தேசிய தடகள வீரர்களுக்கான பயிற்றுநர் அண்ணாவி, குமரி மாவட்ட உடல்வலு சங்கச் செயலாளர் சரவண சுப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர், எம் பி விஜய் வசந்த் மேயர் மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது கண்ணன் 13.50 டன் எடை கொண்ட லாரியை ஒருபக்கக் கயிறு மூலம் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை நிகழ்த்தினார்.
இது அங்கு திரண்டு நின்ற பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கண்ணன் ஏற்கனவே நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா வீரரின் சவாலை ஏற்று 20 கிலோ எடை கொண்ட இரும்பு குண்டை ஒற்றை கையால் தூக்கி சாதனை படைத்ததுடன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உள்ளார். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தார்களாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



