The Sudden Landing Of The Helicopter: சத்தியமங்கலத்தில் பரபரப்பு: திடீரென மலை கிராமத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் (The Sudden Landing Of The Helicopter) அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள உகினியம் மலை கிராமம் உள்ளது. அப்பகுதியில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் திடீரென்று ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. இதனை கண்ட மலை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்க்க தொடங்கினர். இது பற்றி கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹெலிகாப்டரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த ஹெலிகாப்டரில் ஆன்மீக குருவும், வாழும் கலை நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இருப்பது தெரியவந்தது. ஹெலிகாப்டரில் மூன்று உதவியாளர் மற்றும் ஒரு பைலட் உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஹெலிகாப்டர் பைலட் கூறும்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்ட காரணத்தினால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் மலை கிராமத்தில் தரை இறக்கியதாக கூறினார்.