சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு (New Year Celebration In Chennai) இன்று இரவு 12 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போது அனைவரும் கோயில்களுக்கு சென்று இந்துக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம் ஆகும். ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதே போன்று ஒரே நேரத்தில் கோயில்களில் அதிகமானோர்கள் செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கோயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
இதற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், புரசைவாக்கம் கங்கா தீஸ்வரர், பாரிமுனை காளிகாம்பாள், கந்தகோட்டம் முருகன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களிலும் புத்தாண்டையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 100 கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.