Rs.29.38 crores to Govt Tea Estate employees: அரசு தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு ரூ.29.38 கோடி ஒதுக்கீடு

சென்னை: Allocation of Rs.29.38 crores to Government Tea Estate Corporation employees. தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ.29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் (டேன்டீ) பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் மற்றும் இதர பலன்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கடந்த 23.05.2022 அன்று தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது குன்னூரில் அமைந்துள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், டேன்டீ கழகத்தை லாபம் ஈட்டக்கூடியதாகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக கடந்த 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் திட்டத்தை’ நிறுவியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்) கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலை வாய்ப்பு, தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு வருவதோடு அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அதிக இலைவரத்து உள்ள பருவ காலங்களில் தற்காலிக பணியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது டேன்டீயில் 3600 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிக தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டேன்டீ கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பயன்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் பணிக் கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன் பெறுவர். மேலும், தற்பொழுது பணிபுரிந்து வரும் 3820 நிரந்தர தொழிலாளர்களும் மற்றும் 212 ஊழியர்களும் பயன்பெறுவர். ஓய்வு பெற்றபின் பயனாளிகள் பங்களிப்பை அளிக்கத் தயாராக இருக்கும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்தக் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முசாமில் அப்பாஸ், டேன்டீ நிர்வாக இயக்குநர் டி.வி.மஞ்சுநாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.