சென்னை: Tamil Nadu Governor Shri. R.N.Ravi to Release Ondiveeran Commemorative Postal Stamp tomorrow: ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார்.
கடந்த 13ம் தேதி, 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு தேசியக் கொடிகளை அமைச்சர் முருகன் விநியோகம் செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கையும் அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி பாளையங்கோட்டையில் அவரது தபால்தலை வெளியிடப்படவுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.
மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் .தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி அஞ்சல்தலையை வெளியிட்டு உரையாற்றுகிறார்.
அஞ்சல் தலையை பெற்றுக் கொண்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரையாற்றுகிறார்.
மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்.எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
மாமன்னர் ஒண்டி வீரன் தேசியப் பேரவை இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தபால்தலை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நேற்று முன்தினம் நேரில் அழைப்பு விடுத்தார்.
இதேபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமைச்சர் டாக்டர் எல். முருகன் நேரில் அழைப்பு விடுத்தார்.