Opening of a lane for the disabled at Marina Beach: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தரப் பாதை திறப்பு

சென்னை: Opening of a permanent lane for the disabled at Marina Beach. மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தரப் பாதை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

பின்னர் கடற்கரைக்கு வருகைதந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்று, புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தரப் பாதையில் அவர்களுடன் கடற்கரை வரை சென்றனர்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் 2022-23 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களித்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை நிரந்தரமாக அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் அலைகளை கண்டு களித்திடும் வகையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரப் பலகைகளால் ஆன மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரப் பாதைக்கான திட்டப்பணி தற்போது முழுவதுமாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையானது 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டர் நீளத்தில், 6 மீட்டர் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையானது சிகப்பு மெரண்டி, வேல மரம் மற்றும் பிரேசிலின் வகை மரங்களால் ஆனது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவர்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.68,750 வீதம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,12,500 மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.