Nurses Protest In Chennai: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காலக்கட்டத்தின் (Nurses Protest In Chennai) போது மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலமாக தற்காலிகமாக பணியாற்றிய தங்களுக்கு அதே மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் 3 நாட்களாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அமையதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் திடீரென்று கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் எவ்வளவு தொந்தரவுகளை போலீசார் கொடுத்தாலும் தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையும் போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் கூறினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை செவிலியர்களை எழுப்பிய போலீசார் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். இருந்தபோதிலும் போலீசார் கொண்டு வந்த பேருந்தில் ஏற மறுத்த செவிலியர்கள் நடந்தே சென்றனர்.

சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று கொண்டே போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கலைந்து சென்ற செவிலியர்கள் போராட்டத்தை தொடருவோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர். இது ஒட்டுமொத்த செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.