National Human Rights Commission probe into Kallakurichi school begins: கள்ளக்குறிச்சி பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை தொடக்கம்

விழுப்புரம்: National Human Rights Commission probe into Kallakurichi school begins: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்ட மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனைததொடர்ந்து மாணவி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்ட பின்னர், கலவரமாக மாறி பள்ளியில் இருந்த பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூகஆர்வலர் சரவணன் என்பவர், மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், அரசு சட்டவிதிகளின்படி பள்ளி- கல்லூரி கட்டிடங்களில் முதல் தளத்திற்கு மேல் 2, 3-வது தளங்கள் செல்லக்கூடிய நிலையில் திறந்தவெளியில் கட்டிடம் இருக்கக்கூடாது, அது முழுமையாக மறைக்கப்பட வேண்டும். இதுபோன்று இருந்தால்தான் மாணவர்களின் தற்கொலை உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. மாணவி ஸ்ரீமதி இறந்த பள்ளியில் 3-வது தளத்தில் இருந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. 3-வது தளத்தில் இதுபோன்று மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பாக அங்கே சுவர்கள் மூடப்படாததன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் சக்தி மெட்ரிக் பள்ளி மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி- கல்லூரி கட்டிடங்களில் இதுபோன்று அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருக்கின்றன. முதல் தளத்திற்கு மேல் கட்டிடங்கள் செல்லும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், திறந்தவெளியில் இருக்கக்கூடாது, மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் சக்தி பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

சமூகஆர்வலர் சரவணனின் புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், அதனை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.