சென்னை: Madurai-Coimbatore special train now converted into a continuous service. மதுரை – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நாளை முதல் நிரந்தர சேவையாக தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை-பழனி இடையே 06480 எண் கொண்ட ஒரு விரைவு சிறப்பு ரயிலும், பழனி – கோயம்புத்தூரிடையே 06462 எண் கொண்ட ஒரு சிறப்பு ரயிலாகவும் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தன.
மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் பழனியில் சிறிது நேரம் நின்று, புதிய ரயிலாக புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர்- பழனி இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06463) பழனி- மதுரை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06479) தனித்தனியாக இயங்கி வந்தன. இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு பழனியில் சிறிது நேரம் நின்று மீண்டும் புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும்.
இந்நிலையி்ல, தற்போது இந்த சிறப்பு ரயில்கள் ஒரே வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டு நாளை முதல் (செப்டம்பர் 1) இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை-கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் மதுரை விரைவு ரயில் (16721) கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இதன் மூலம் மதுரை கோயம்புத்தூர் விரைவு ரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்களம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அறிக்கையில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.