இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை

kovilpatti-peanut-candy
கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை

Kovilpatti Peanut candy: கோவில்பட்டி கடலை மிட்டாய் தபால் நிலையங்கள் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:- புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.

தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் தபால்காரர் மூலம் சேர்க்கப்பட உள்ளது.

இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் ரூ 390 கொடுத்து கடலை மிட்டாய் ஆர்டர் செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சலக இணையம் மூலம் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கு விரைவு அஞ்சல் மூலம் கொண்டு சேர்க்கப்படும்.

விரைவு அஞ்சலுக்கு தனி கட்டணம் கிடையாது. ஒரு கிலோ எடையுள்ள கடலை மிட்டாய் பார்சலில் 5 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். வீட்டிலிருந்தபடியே தபால் காரர்கள் மூலம் ரூ 390 கட்டி ஆர்டர் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Cinema: பிரபல நடிகை மூலம் இணையும் தல – தளபதி