Increase in water flow to Mettur dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

சேலம்: Increase in water flow to Mettur dam to 1.30 lakh cubic feet: கர்நாடக அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருவதால் அங்கு உபரிநீர் தொடர்ந்து காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த உபரி நீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து வரும் நீர்வரத்தால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் தொடர்ந்து 29 நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 24 மணி நேரமும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை நிலவரப்படி, மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.06 அடியாக உள்ளது. தொடர்ந்து வரும் நீர்வரத்தால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரியில் புரண்டோடும் வெள்ள நீரில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் அருகில் சென்று செல்பி எடுக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.