சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை (Full Time Food Donation Cm Inaugurated) அருணாச்சலேஸ்வர் உட்பட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இக்கோயிலை அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பு செய்து வருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். அதில் பழனி கோயில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உள்ளிட்ட இடங்களில் முழுநேர அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மேலும் 3 கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளிட்டவைகளில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தவாரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.