சேலம்: Drug Eradication Awareness Talk Competition in Salem: சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உருக்கமான வேண்டுகோள் அடங்கிய விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களுக்கு திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சேலம், பாவடி நகரவை மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உருக்கமான வேண்டுகோள் அடங்கிய விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களுக்கு இன்று (12.08.2022) முதல் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் காக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 10.08.2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்குபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாணவ, மாணவியர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுத்தல், பாதுகாப்பான இணையதளத்தை பயன்படுத்துதல், போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உருக்கமான வேண்டுகோள் அடங்கிய விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களுக்கு திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சேலம், பாவடி நகரவை மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது. தொடர்ந்து விழிப்புணர்வு வாரத்தில் போதைப்பொருள் குறித்து ஓவியப்போட்டி, வினாடி வினா, கட்டுரைப்போட்டிகள் நடைபெற உள்ளது.