EPS Diwali wishes: தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து ஒளி நிலைத்திருக்கட்டும்: இபிஎஸ் தீபாவளி வாழ்த்து

சென்னை: Diwali Greetings from Edappadi Palaniswami. தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து ஒளி நிலைத்திருக்கட்டும் என எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இல்லங்கள் தோறும் தீப ஒளி ஏற்றி, இருள் அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி! தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.