Compensation to 4.43 lakh farmers: பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை

சென்னை: Compensation to 4.43 lakh farmers under crop insurance scheme. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ (சம்பா நெல் உட்பட இதர) பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை தமிழக முதல்வர் வழங்கி தொடங்கி வைத்தார்.

உழவர்களின் நலனை பேணும் வகையில் இத்துறையை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ததுடன், வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, 2021-22-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 122 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் 14 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது.

2021-2022 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் சுமார் 40.74 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்காக, 26.06 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக, 18 கோடி ரூபாய், 21,125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டு சிறப்பு பருவ (சம்பா நெல் மற்றும் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட) பயிர்களுக்கு தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1338.89 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டது.

இதன் விளைவாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை விரைவில் வழங்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து, 2021-2022 ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் உட்பட சிறப்புப் பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் 481 கோடி ரூபாய், 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வினைமுதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இயற்கை பேரிடரினால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு 2022-23-ஆம் ஆண்டிலும் ரூ.2,057 கோடி நிதியினை தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக நிதி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 63,331 ஏக்கர் பரப்பளவு 85,597 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்து பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.