சென்னை: Chief Minister Stalin hoisted the tricolor flag on the fort: சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் இன்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல், நாடுமுழுவதும் உள்ள மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் உரை நிகழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள்.
சுதந்திர தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை வணங்குகிறேன். விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண். சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாசனப்பரப்பு அதிகமாகி, விளைச்சல் அதிகமாகி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பெருகி வரும் மழையும் நல்லாட்சிக்கு நற்றுணையாக இருக்கிறது.
இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கையும் செயல்படுத்தி தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார்.
சுதந்திர தினவிழாவில் பொதுவுடமைவாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
தகைசால் தமிழர் விருது பெற்ற நல்லகண்ணு தனக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்தோடு கூடுதலாக 5,000 சேர்த்து 10,05,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதலமைச்சரிடம் வழங்கினார்.
விருது பெற்றவர்கள்:
தகைசால் தமிழர் விருது : நல்லகண்ணு
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது : முனைவர் இஞ்ஞாசி முத்து
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது : பா.எழிலரசி, நாகப்பட்டினம்
உங்கள் தொகுதியில் முதல்வர் விருது : எஸ் லட்சுமி பிரியா
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள் : மருத்துவர் பா ஜெய்கணேஷ் மூர்த்தி, உதகமண்டலம்
சிறந்த நிறுவனம் : ரெனே சான்ஸ் அறக்கட்டளை, புதுக்கோட்டை
சிறந்த சமூகப் பணியாளர்: சு அமுத சாந்தி, மதுரை.