Chief Minister inspects rainwater drainage works: ரூ.167.08 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு

சென்னை: Chief Minister inspects rainwater drainage works worth Rs.167.08 crore in Chennai. சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் ரூ.167.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் சென்னை மாநகரின் என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம், டெமலஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் – வேலவன் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் ஆகிய இடங்களில் 167.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றது. வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, அப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் இன்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரையின்படி மூலதன நிதியின் கீழ், 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 46 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், ரிப்பன் கட்டடம், ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரையின்படி, சிங்கார சென்னை Phase | திட்டத்தின் கீழ், 2.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

நெடுஞ்சாலைத் துறை சார்பில் வால்டாக்ஸ் சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் மூலக்கொள்ளதம் வரை 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4600 மீட்டர் நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், எட்டு குறுவடிகால்கள் (சிறுபாலங்கள்) மற்றும் மூன்று அணுகு கால்வாய்கள் அமைக்கும் பணிகள்;

நீர்வளத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை , பேசின் பாலத்திற்கு அருகில் வடக்கு பக்கிங்காம் கால்வாயில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் டெமலஸ் சாலை, முனுசாமி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழு பரிந்துரையின்படி, ஆலோசகரிடமிருந்து தொழில்நுட்ப வடிவமைப்பும், சென்னை -இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) ஒப்புதலும் பெற்று சிங்கார சென்னை Phase | திட்டத்தின் கீழ் 3.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 725 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

திரு.வி.க. நகர் மண்டலம், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரையின்படி, புளியாந்தோப்பு நெடுஞ்சாலையில் மூலதன மானிய நிதியின் கீழ் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 790 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக சிங்கார சென்னை Phase | திட்டத்தின் கீழ், 2.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

கொளத்தூர் பகுதியில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ், 92 சாலைகளில் 96.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக வேலவன் நகர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலை (பேருந்து தட சாலை) சந்திப்பில் 485 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்;

நெடுஞ்சாலைத் துறை சார்பில் கொளத்தூரில் உள்ள டெம்பிள் ஸ்கூல், வீனஸ் நகர், செல்வி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக உள்வட்டச் சாலையில் வீனஸ் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் பகுதிகளில் 2.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 HP திறன் கொண்ட வினாடிக்கு 2.4 கன மீட்டர் நீரை வெளியேற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகள் என மொத்தம் 167.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வளவு ஆய்வு செய்திருக்கிறீர்கள், பணிகள் திருப்தியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு, சென்ற வாரம் தென்சென்னை பகுதியில் ஆய்வு செய்தேன். அங்கு கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்திருக்கிறது. அதேபோல, இப்போது வடசென்னை பகுதியில் இன்று காலையில் இருந்து ஆய்வு செய்திருக்கிறேன். மழை தொடர்ந்து அவ்வப்போது பெய்து கொண்டிருப்பதால் பணிகள் தடைப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, குறைந்தபட்சம் 15 நாட்கள், அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் எல்லாப் பணிகளும் முடிவடைந்துவிடும் என்கிற திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது என முதல்வர் தெரிவித்தார்.