Bomb threat to Trichy Collector’s office: திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: Bomb threat to Trichy Collector’s office: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியளவில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய அவர், நான் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியமூர்த்தி, அருளானந்தம் மற்றும் போலீசார் மோப்ப நாய் டெய்சியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு அவர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், அந்த எண்ணில் பேசியவர் திருச்சி நகரின் பஞ்சப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி(வயது 43) என்பதும், அவர் காவலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பழனிச்சாமியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.