Husband attacked wife with sickle: மனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவன் தப்பியோட்டம்

தூத்துக்குடி: Husband attacked wife with sickle: தூத்துக்குடியில் தாய் வீட்டில் பணம் வாங்காமல் வந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளத்தினை சேர்ந்த முனீஸ்வரிக்கும், ராமநாதபுரம் மாவட்டம், மரையூரைச் சேர்ந்த முனீஸ்வரனுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் முனீஸ்வரன் மதுவிற்கு அடிமையானார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனைவியின் நகைகளை விற்று மது குடித்து வந்துள்ளார்.

மேலும் குடிக்க பணம் வேண்டி, முனீஸ்வரன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கணவன் தொந்தரவு தாங்க முடியாததால் முனீஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் பல்லாகுளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் பல்லாகுளத்திற்கு வந்த முனீஸ்வரன், பணம் வாங்கி வராமல் இங்கு இருப்பது ஏன் என்று கூறி தனது மனைவியுடன் தகராறு செய்ததது மட்டுமின்றி, அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பியோடி தலைமறைவானார்.

இதையடுத்து காயமடைந்த முனீஸ்வரியை அருகில் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கபட்டது. புகாரை பெற்றுக்கொண்ட சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த முனீஸ்வரனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஊட்டி அருகே புலி தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் அரக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை வனவிலங்கு தாக்கி இழுத்து சென்றதாக வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், விரைந்த வந்த வனத்துறையினர் படுகாயத்துடன் கிடந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(வயது4) என்ற சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதில் சிறுமியை சிறுத்தை அல்லது புலி தாக்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூவம் ஆற்றில் ஒருவர் தற்கொலை:
சென்னை அடையாறு பகுதியில் உடல்நலக்குறைவால் கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சென்னை வியாசர்பாடி சிவசக்தி விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 58). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை அன்று இளங்கோவன் அடையாறு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளார், உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இளங்கோவனின் உடல் கூவம் ஆற்றில் மிதந்து வந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு இளங்கோவனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.