Perarivalan release: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிமுக சட்ட ஞானத்திற்கு கிடைத்த மகாத்தான வெற்றி என்று ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஒபிஎஸ் – இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று (மே 18) விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது.
அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்ய வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும் அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற 6 பேர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என்று 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றோம் என்றுள்ளனர்.