Branch Of Chennai High Court: புதுவையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் (Branch Of Chennai High Court) கிளை அமைக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) ராஜா சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதிமன்றத்தில் அதிகமான நேரம் மக்கள் செலவிடக் கூடாது. எனவே மக்களுக்கு உரிய நீதி விரைந்து கிடைப்பது அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறைக்கு தேவையான ஒத்துழைப்பை அரசு தரும். மேலும், புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அல்லது பென்ஞ் நிச்சயம் அமைத்து தரப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார்.