Bike Accident: புதிய பைக்கில் ஓட்டிப்பார்க்க சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்போரூர்: புதிய இரண்டு சக்கர வாகனத்தை (Bike Accident) ஓட்டி பார்க்க சென்றபோது மினி வேன் மீது மோதியதில் பள்ளி மாணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கல்குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் 27. இவர் வீடுகளுக்கு அழகுப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திருப்போரூரில் மாமியார் வீடு அருகே குடிபெயர்ந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு சகோதரர் காந்தியின் மகன் பாலாஜி 14, பள்ளி விடுமுறைக்கு வந்துள்ளார். இவர் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு விரால்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சில் அப்பகுதி இளைஞர்கள் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இதில் நாகராஜ், பாலாஜியும் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஜோஷ்வா என்பவரின் புதிய பைக்கில் ரைடு போய்விட்டு வரலாம் என்று வாங்கிக்கொண்டு அதில் நாகராஜ் மற்றும் பாலாஜி, பள்ளி மாணவன் ரிஷாக் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில் மற்றவர்கள் அவர்களை தேடி பைக்கில் சென்றனர்.

அப்போது வெங்கூர் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மினி லாரி மீது நாகராஜ் ஓட்டிச்சென்ற புதிய பைக் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ், பாலாஜி, ரிஷாக் உள்ளிட்ட மூன்று பேரும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை கண்ட சக நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர். புத்தாண்டை கொண்டாடிய நிலையில் இப்படி ஒரு விபத்து நடந்து விட்டதே என்று அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.