17 Melmaruvathur devotees injured: திண்டிவனம் அருகே விபத்தில் மேல்மருவத்தூர் பக்தர்கள் 17 பேர் காயம்

விழுப்புரம்: 17 Melmaruvathur devotees injured in an accident near Tindivanam. திண்டிவனம் அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 17 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் இருந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் வந்தனர்.

இதில் 20 பெண்கள் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். வேனை பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டை சேர்ந்த மணிமாறன் (வயது 33) என்பவர் ஓட்டினார்.

மேல்மருவத்தூரில் தரிசனம் செய்த அவர்கள், பின்னர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே உள்ள குபேரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துகொண்டு புறப்பட்டனர்.

அப்போது, ஓங்கூரில் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருச்சி மாவட்டம் காத்தநாயக்கன்பட்டி கோபாலகிருஷ்ணன் (38) என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, வேன் மீது மோதியது. இதில், வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.