பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பலம் பாதியாக குறையும் என சர்வே அறிக்கை கிடைத்துள்ளதால், ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த அக்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.
அண்மையில் பாஜக கட்சி மேலிடம் நடத்திய சர்வே அறிக்கையில், மாநிலத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சியை கைப்பற்றும் கனவில் இருக்கும் பாஜகவிற்கு எதிராக உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலம் 119 இல் இருந்து 60 (BJP MLAs will fall to 60) ஆக குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாநில பாஜக மற்றும் அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து ஆலோசித்து அவசர தேர்தல் வியூகம் வகுக்க பாஜக வரும் வெள்ளிக்கிழமை முக்கியக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.
ஆபரேஷன் கமலா போன்றவற்றை செயல்படுத்திய பிறகே மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தாமரை மலர்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைப்பது பாஜகவுக்கு கௌரவ பிரச்னையாக உள்ளது. இதனால் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாஜக தயாராகி வருகிறது. மாநிலத்தில் மீண்டும் பிரதமர் மோடியின் பெயரைக் கூறி ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மாநில பாஜகவின் தலைவர்களுக்கு, அக்கட்சியின் மேலிடம் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நடத்திய சர்வே அறிக்கை அதிர்ச்சியை(The survey report was shocking) ஏற்படுத்தியுள்ளது. பாஜக இதுவரை நடத்திய 3 உள்கட்சி ஆய்வுகளிலும், மாநிலத்தில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இருப்பதை விட பாஜகவின் பலம் பாதியாக குறையும் என்றால், 119-இல் இருந்து 60 க்கு வரும். இதனால், பாஜக ஆட்சிக்கு வரும் என்ற கனவு கனவாகவே முடியும். பாஜகவின் வீழ்ச்சிக்கு அக்கட்சியின் மீது சுமத்தப்படும் ஊழல்கள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சியில் 40 சதம் கமிஷன் பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, ஹர்ஷா கொலை வழக்கு, ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை(Contractor Santosh Patil suicide), பிரதமர் அலுவலகம் வரை சென்றது. இது போன்ற பல பிரச்னைகள் பாஜக அரசுக்கு எதிரான தோற்றதை மக்களிடத்தில் ஏற்படுத்தி விட்டதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகணிப்பு அறிக்கையால் பீதியடைந்துள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மேலிடத்தலைவர்கள், மாநில பாஜகவை வலுப்படுத்தவும், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறவும் தேவையான வியூகங்களை வகுப்பதற்காக பெங்களூரு புறநகரில் உள்ள ரிசார்ட்டில் வரும் வெள்ளிக்கிழமை கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர். இதில் மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண்சிங் (State BJP in-charge Arun Singh), பாஜக அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கான வியூகம், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.