தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் (No Safety For Women In Tamil Nadu) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக, மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. செய்தித்தாள்களில் தினந்தோறும் வருகின்ற செய்திகளே இதற்கு சாட்சி ஆகும்.
மேலும் தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு பிரச்சனை நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்காதது போன்று உள்ளார். அவரது செயல்பாடுகளும் அப்படிதான் உள்ளது. தாங்கள் எழுதிக்கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என்று சொல்வது சரியில்லை. அது மட்டுமின்றி சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறும்போது அமைச்சர் பொன்முடி மிகவும் இழிவாக பேசியுள்ளார். இதற்கு முன்புகூட பேருந்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் பற்றியும் இழிவாக பேசியுள்ளார். இவ்வாறு குஷ்பு கூறினார்.