Ramadoss Sugarcane Statement: 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (Ramadoss Sugarcane Statement) அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை கொடுப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர் கரும்பை தராமல் விட்டதால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் 6 அடிக்கும் மேல் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏன் என்றால் 6 அடிக்கும் கீழ் உள்ள கரும்புகள் அப்படியே நின்றுவிடும் என்ற கவலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், இது பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது. 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது. கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.