Jayakumar Warns Anbumani Ramadoss: எம்.பி.யாக இருப்பதே எங்களால்தான், அன்புமணிக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் (Jayakumar Warns Anbumani Ramadoss) எம்.பி.யாக இருப்பதே அ.தி.மு.க.வால்தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க.வின் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசும்போது, அ.தி.மு.க. தற்போது 4 ஆக உடைந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சியாக நாங்கதான் உள்ளோம் என்றார். இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியது.

இந்நிலையில், இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க.வால் தான் பாமவிற்கு எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., கிடைத்துள்ளனர். பாமவுக்கு அடையாளம் காட்டியதே நாங்கள்தான். நீங்க இப்போ எம்.பி.யாக இருப்பது யாரால? என்று யோசித்து பாருங்கள்.

மேலும், பலம் வாய்ந்த அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்த முடியாது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். சிறுமையான கருத்தை சொல்லி சிறுமைப்படுத்தும் வேலையில் எதிர்காலங்களில் ஈடுபட வேண்டாம். அப்படி சீண்டினால் உங்களுக்கு தக்க பதிலடி அளிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.