புதுடெல்லி: Winter Session of Parliament adjourned sine die today. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
இந்த குளிர்கால கூட்டத்தொடர் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் 13 அமர்வுகள் இருந்தது. டிசம்பர் 7 முதல் டிசம்பர் 29 வரையில் 17 அமர்வுகள் நடத்தப்பட இருந்தது. ஆனால், 2 அவைகளின் செயல் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மத்திய அரசு நிறைவு செய்ய வேண்டிய பணிகள் காரணமாகவும் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் குறித்து அவையின் உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கை, அவர்களது நம்பிக்கை மற்றும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த குளிர்கால கூட்டத்தொடர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 7 மசோதாக்களும் மாநிலங்களவையில் 9 மசோதாக்களும் நிறைவேறியது என்றார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால், மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் ஆகியோரும் உடனிருந்தனர்.



