சென்னை : PM Narendra Modi coming to Chennai : 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைப்பதற்காக, 28-ஆம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
தமிழகம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி (44th International Chess Olympiad) வரும், 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்தப் போட்டியை தொடக்கி வைக்க ஜூலை 28-ஆம் தேதி மாலை, 4:45 மணிக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, இந்திய விமானப் படையின் தனி விமானத்தில், பிரதமர் நரேந்திரமோடி சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து மாலை 5.25 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெறும், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு (Nehru Indoor Stadium) 6 மணிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் விழாவில் பங்கேற்ற பின்னர் 7.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.50 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைகிறார்.
ஆளுநர் மாளிகையில் (Governor’s House) இரவு தங்கும் பிரதமர், 29-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். 11.30 வரை பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி 11.50 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு, இந்திய விமானப் படையின் தனி விமானத்தில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.