PM participates in Kullu Dussehra: குல்லு தசராவில் பங்கேற்ற பிரதமர்

புதுடெல்லி: PM participates in Kullu Dussehra. இமாச்சலப் பிரதேசம் குல்லுவில் உள்ள தால்பூர் மைதானத்தில் குல்லு தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பிரதமர் வருகையின்போது அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரத யாத்திரையைக் குறிக்கும்வகையில் பகவான் ரகுநாத் வருகை அமைந்தது. பிரதமரை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடந்து சென்ற பிரதமர் பகவான் ரகுநாத்தை வணங்கினார். கூப்பிய கைகளுடன் இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர் பகவானின் ரத யாத்திரையையும் வரலாற்றுச் சிறப்புமிக்க குல்லு தசரா விழாவில் கடவுளர்களின் ஒருங்கிணைவையும் தரிசனம் செய்தார். குல்லு தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.

சர்வதேச குல்லு தசரா விழா குல்லுவின் தால்பூர் மைதானத்தில் 2022 அக்டோபர் 5 முதல் 11 வரை கொண்டாடப்படுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 300க்கும் அதிகமான கடவுளர்கள் ஒன்றுகூடும் வகையில் இந்த விழா தனித்துவமானதாகும். இந்த விழாவின் முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் இந்தக் கடவுள்கள், தலைமைக் கடவுளான பகவான் ரகுநாத் கோவிலுக்கு வந்து வணக்கம் தெரிவித்து பின்னர் தால்பூர் மைதானத்திற்கு செல்வார்கள்.

இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெயராம் தாக்கூர், இமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அலேக்கர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி தேசிய தலைவருமான ஜெகத் பிரகாஷ் நட்டா, நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி மாநிலத் தலைவருமான சுரேஷ்குமார் காஷியப் உள்ளிட்டோர் பிரதமருடன் விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் நாட்டுக்கு அர்பணித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் லுஹ்னுவில் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.