பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர கர்நாடகா, மலைநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் 12 மாவட்டங்களில் மஞ்சள் (Yellow Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கடலோர, மலைப்பகுதி, வடக்கு மற்றும் தெற்கு உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மற்றும் சிக்கமகளூரு (Chikkamagaluru), சித்ரதுர்கா, ஹாசன், குடகு, ஷிமோகா, தும்கூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, வட இந்தியாவில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. “இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப், ஹரியானா (Punjab, Haryana), சண்டிகர் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. ஜூலை 29 அன்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இடி அல்லது மின்னலுடன் கூடிய கனமழை பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.