Introduction to 4 year B.S course at IIT Chennai: சென்னை ஐஐடி.,யில் 4 ஆண்டு பி.எஸ்., படிப்பு அறிமுகம்

சென்னை: Introduction to 4 year B.S course at IIT Chennai: பி.எஸ்சி., புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை 4 ஆண்டு பி.எஸ். பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி மெட்ராஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதி மாணவர்களும் வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (BS in Data Science and Applications) நான்காண்டுப் பட்டப் படிப்பாகவும் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும்.

தனித்துவம் வாய்ந்த இப் பாடத்திட்டம் மாணவர்கள் சேர்வதற்கும் படிப்பை முடித்துச் செல்வதற்கும் ஏற்ற வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. கல்வி கற்போர் தாங்கள் விருப்பப்படி சேர்ந்து பயன்பெற ஏதுவாக நெகழ்வுத் தன்மையுடன் இப்பாடத் திட்டம் அமைந்துள்ளது.

தற்போது 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள், தாங்கள் 12-ம் வகுப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தபின் இப்பாடத் திட்டத்தில் படிப்பைத் தொடங்கலாம். எந்த பாடப்பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்த எந்தவொரு மாணவரும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பூகோள ரீதியான வரம்பும் கிடையாது.

பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பரில் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பாடத்திட்டம் குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்ற உள்ளடக்கிய படிப்பை ஐஐடி தரத்துடன் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்குவதில் ஐஐடி மெட்ராஸ் மகிழ்ச்சி அடைகிறது. பிரபலமாகி வரும் பாடப்பிரிவுகளில் தரவு அறிவியலும் (Data Science) ஒன்று. திறமையான வளங்களுக்கான தேவைகள் அதிகரித்துக் காணப்படும் களத்தில் இது ஒரு வேலைவாய்ப்பு சார்ந்த திட்டமாகும்” எனக் குறிப்பிட்டார்.

தரவை நிர்வகித்தல், நிர்வாக ரீதியான நுண்ணறிவைப் பெற வடிவங்களைக் காட்சிப் படுத்துதல், ஐயப்பாட்டு மாதிரிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு தரவு அறிவியல் (Data Science) கற்றுக் கொடுப்பதுடன், பயனளிக்கும் வணிக முடிவுகளை எடுக்க ஏதுவாக முன்னறிவிப்பு மாதிரிகளைக் கட்டமைக்கவும் உதவியாக இருக்கும். விரிவான நேரடிப் பயிற்சி மற்றும் அனுபவக் கற்றல் மூலம், மாணவர்கள் தொழில் தரநிலைகளைச் சந்திக்கும் வகையில் நன்கு பயிற்சி பெறுகின்றனர். இப்பாடத் திட்டத்தில் பட்டயப் படிப்பு (diploma) முடிக்கும் மாணவர்களுக்கு நிறுவனங்களில் உள்ளிருப்பு பயிற்சியும் வேலைவாய்ப்பும் கிடைக்க ஐஐடி மெட்ராஸ் உதவுகிறது.

இந்த புதிய முன்முயற்சிக்கான பின்னணி குறித்து விவரித்த பேரா. ஆண்ட்ரூ தங்கராஜ், பொறுப்பு பேராசிரியர், பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், ஐஐடி மெட்ராஸ் கூறும்போது, “டேட்டா சயின்ஸ் என்பது பல்துறைக் களமாக விளங்குவதால், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் ஐஐடி மெட்ராஸ்-ன் பி.எஸ். பட்டம் அமைந்துள்ளது. வணிகவியல், மானுடவியல் போன்ற பாடங்களைப் படிப்போரும் ஐஐடி வழங்கும் பட்டத்தைப் பெறலாம். வகுப்புகள் ஆன்லைன் மூலமும், நேரடித் தேர்வுகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறுவதால், பட்டப் படிப்பு பயில்வோரும், முழுநேரப் பணியில் ஈடுபட்டிருப்போரும் இந்த பட்டப் படிப்பைத் தொடரலாம்” எனத் தெரிவித்தார்.

முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இப்பாடத் திட்டத்தின் வாயிலாக, மிகக் கடுமையான போட்டி நிறைந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination -JEE) எழுதாமலேயே ஐஐடி மெட்ராஸ்-ல் மாணவர்கள் படிப்பது சாத்தியமாகி உள்ளது. கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் மிகப் பெரிய தடையாக உள்ள நிலயில், இந்த பாடத்திட்டத்தால் அவர்கள் நேரடியாகப் பயன்பெறுகின்றனர். நிதிவசதி இல்லாத மாணவர்களுக்கு 100 விழுக்காடு வரை கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

டாக்டர் விக்னேஷ் முத்துவிஜயன், பொறுப்பு பேராசிரியர், பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், ஐஐடி மெட்ராஸ் கூறுகையில், “பி.எஸ்.பாத்திட்டத்தில் சேர ஜேஇஇ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு எந்த நுழைவுத் தேர்வையும் போலன்றி, இப்பாடத் திட்டத்திற்கான தகுதி நடைமுறைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகும். அதிநவீன கற்பிக்கும் தொழில்நுட்பம் காரணமாக, தகுதியுடைய அனைத்து மாணவர்களையும் அதாவது எண்ணிக்கை அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சேர்க்க ஐஐடி மெட்ராஸ் வழிவகையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி உதவித்தொகையை தாராளமாக வழங்கி, நாட்டிலேயே முதன்முறையாக உள்ளடக்கிய புதிய மாதிரி ஒன்றை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

தரவு சார்ந்த உலகில் திறமையுடன் பணியாற்றக் கூடிய நிபுணர்களை உருவாக்கும் தளமாக ஐஐடி மெட்ராஸ்-ன் பி.எஸ். பாடத்திட்டம் அமையும். அனைத்தையும் உள்ளடக்கிய- எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் ஐஐடி வடிவமைத்துள்ள இக்கல்வி முறையால், அனைத்து எல்லைகளையும் தாண்டி, உயர்தரமான கல்வி பெற விரும்புவோரின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என ஐஐடி மெட்ராஸ் குழு உறுதியாக நம்புகிறது.