Woman Murder: குடும்பத்தகராறில் பெண் கொடூரக்கொலை; 2வது கணவன் கைது

சென்னை: Police have arrested the second husband who killed his wife due to a family dispute in Chennai. சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கொன்ற 2வது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகர், அம்பத்தூர் கெங்கை நகர், கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா(வயது 28). இவர் கடந்த ஓராண்டாக கணவரைப்பிரிந்து தாய் வீடான புழல் கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தார்.

அந்த வீட்டின் அருகிலேயே மனைவியை இழந்து வசித்துவந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 6 மாதத்திற்குப்பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் தங்கி அங்குள்ள ஒரு துணிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் அம்பத்தூரில் உள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பவித்ரா – ராஜாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பவித்ராவின் தாய் அமுதா வீட்டுக்கு வந்து, அவரை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் இரவு ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் ரமணி சம்பவ இடத்திற்கு சென்றபோது, பவித்ரா சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து பவித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி, உதவி ஆய்வாளர் முபாரக் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டதும், அவரது 2வது கணவர் ராஜாவும் மாயமாகியதும் தெரியவந்தது. இந்நிலையில், ராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் பவித்ராவின் தற்கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நள்ளிரவில் ராஜா அம்பத்தூரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.