Chennai Murder: மகள் கொலையான வேதனையில் மாரடைப்பால் தந்தையும் உயிரிழப்பு

சென்னை: The father also died of heart attack in agony over his daughter’s murder. சென்னையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டதால் தந்தையும் மாரைடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சந்தியாவுக்கு காதல் தொல்லை கொடுத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று சந்தியாவை சந்திப்பதற்காக சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் காரணமாக ஆத்திரமடைந் சதீஷ் திடீரென சந்தியாவை மின்சார ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி சந்தியா, தலை நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பரங்கிமலை ரயில்நிலையத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் சந்தியாவின் உறவினர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி, ரயில்வே காவல் துறையினர் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை, துரைபாக்கத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை தப்பியோடிய சதீஷை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து சதீஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெரும் சோகத்தில் இருந்த மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் வேதனையில் அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கொலையாளி சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.