5 killed in Salem Accident: சேலம் அருகே பேருந்து மீது லாரி மோதி 5 பேர் பரிதாப பலி

சேலம்: 5 people were tragically killed in an accident where a truck collided with a bus near Salem. சேலம் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாப பலியாகினர்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுப நிகழ்வுக்காக சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் 7 பேரு முன்பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை செல்ல பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆம்னி பேருந்துக்காக காத்திருந்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்து சேலத்திலிருந்து வந்தபோது ரவிக்குமார் அவரது குடும்பத்தினருடன் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர். மற்ற பயணிகளும் பேருந்தில் ஏறிகொண்டிருந்தனர். அந்தவேளையில், அந்த வழியாக மண் ஏற்றி வந்த கண்டெய்னர் ஒன்று சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், ரவிக்குமார், அவரது தந்தை திருநாவுக்கரசு, செந்தில்வளவன், சுப்பிரமணி மற்றும் பேருந்து கிளீனர் தீபன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலின் பேரில் அங்கு விரைந்த ஏத்தாப்பூர் போலீசார் பலியானோரின் 5 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் ரவிக்குமார் உட்பட குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ரவிக்குமாரின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.