புதுடெல்லி: Long list of questions prepared for Jacqueline Fernandez. சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலினிடம் கேட்கப்படும் நீண்ட கேள்வி பட்டியலை டெல்லி காவல்துறை தயார் செய்துள்ளது.
ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு நாளை (14ம் தேதி) விசாரணை நடத்தவுள்ளது.
நாளை காலை 11 மணியளவில் மந்திர் மார்க்கில் உள்ள EOW அலுவலகத்திற்கு நடிகை ஜாக்குலின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜாக்குலின் பதிலளிக்க வேண்டிய கேள்விகளின் பட்டியலைத் தயாரித்துள்ளோம் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் நடிகை ஜாக்குலினுக்கும், சுகேஷுக்கும் இடையிலான உறவு மற்றும் அவரிடமிருந்து ஜாக்குலின் பெற்ற பரிசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் அமையும். அந்த காலகட்டத்தில் சுகேஷை ஜாக்குலின் எத்தனை முறை தொலைபேசியில் பேசினார். என்பது குறித்தும் அவரிடம் கேட்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக பிங்கி இரானிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷை தொடர்புகொள்ள இரானி உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் விளக்கங்கள் பெற பிங்கி மற்றும் ஜாக்குலின் விசாரணையின் போது இந்த கேள்வி எதிர்கொள்ளப்படலாம். ஜாக்குலினின் விசாரணை ஓரிரு நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்பதால், டெல்லியில் தங்குவதற்கு திட்டமிடுமாறும் ஜாக்குலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகேஷ் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில் ஜாக்குலின் பெயரையும் அமலாக்க இயக்குனரகம் (ED) தங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில், குற்றவியல் வழக்குகளில் சுகேஷின் தொடர்புகள் பற்றி நடிகர் ஜாக்குலின் அறிந்திருந்ததாகவும், ஆனால் அவர் தனது குற்றவியல் கடந்த காலத்தை கவனிக்காமல் அவருடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அமலாக்க முகமை தெரிவித்துள்ளது.
“ஜாக்குலினுக்காக தயாரிக்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு, இந்த வழக்கில் முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நோரா ஃபதேஹியிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து வேறுபட்டது” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.