காஞ்சிபுரம்: Garlanding by crane to 30 feet Ajith cut out. காஞ்சிபுரத்தில் முதுகில் அலகு குத்தி கிரேன் மூலம் 30 அடி அஜித் கட்அவுட்டிற்கு ரசிகர் ஒருவர் மாலை அணிவித்தார்.
பொங்கல் பண்டிகையை சில தினங்களில் தமிழக மக்கள் கொண்டாட உள்ள நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பொங்கலுக்கு வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் நாளை காலை வெளியாகும் என கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே அறிவித்து ரசிகர்களை பட தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ஒரே திரையரங்க வளாகத்தில் திரையிட உள்ளதால் ரசிகர்கள் நீயா நானா என போட்டி போட்டு பேனர் , கட்டவுட் வைப்பதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் முதலாவதாக இன்று நள்ளிரவு ரிலீஸ் ஆக உள்ளதால், காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அஜித்குமாரின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அடுத்த நெமிலி பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர் அஜித்குமார் முதுகில் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் மேலே சென்று 30 அடி உயரமுள்ள அஜித்குமார் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
காஞ்சிபுரம் முழுதும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.