டோக்கியோ: Shinzo Abe : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஷின்சோ அபே விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான 41 வயதான டெட்சுயா யமகாமியை ஜப்பான் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட டெட்சுயா யமாககி துப்பாக்கிச் சுட்ட சம்பவம் நடந்த நாரா பகுதியில் வசிப்பவர் என்பதும், அவர் ஜப்பானிய கடற்படையின் ஒரு அங்கமான கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் வீரர் என்பதும் தெரியவந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷின்சோ அபேவைத் தனிப்பட்ட முறையில் தயார் செய்த துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு நகரமான நாராவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே ஷின்சோ அபே உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் டெட்சுயா யமகாமி அவரை பின்னால் இருந்து சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷின்சோ அபேவின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டது. இரண்டாவது புல்லட் ஷின்சோ அபேவின் மார்பில் பின்னாலிருந்து துளைத்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஷின்சோ அபே இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்த பாடுபட்டதாக பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.