புதுச்சேரியில் இளைஞர் படுகொலை!

புதுச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி – திலாசுப்பேட்டை கருணாஜோதி வீதியைச் சேர்ந்தவர், கவுதம். இவர் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்துவந்தார். இந்நிலையில் நேற்றிரவு கோரிமேடு பகுதியில் ஒரு மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு, சுப்பையா திருமண நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கவுதம் மீது முருகா திரையரங்கம் அருகே காவலர் ஒருவரைத் தாக்கிய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோரிமேடு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.