பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

திருமண ஆசை காட்டி 12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை ஆவடி காவல் துறை கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி கடந்த 30ஆம் தேதி உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருந்தபோதிலும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் காளிராஜ், தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியைத் தேடி வந்துள்ளனர். பின்னர் விசாரணையில் பள்ளி மாணவியை ஆவடி, காமராஜர் நகர், ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதன் பிறகு, காவல் துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் இளைஞர் விக்ரமை தாம்பரம் பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரிடமிருந்து பள்ளி மாணவியை மீட்டனர். அதன்பிறகு விக்ரமை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், காவல் துறையினர் பள்ளி மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, விக்ரமை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.