மறுவாக்குப்பதிவில் 186 பேர் மட்டுமே வாக்குபதிவு..!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், சென்னை வேளச்சேரியில் உள்ள, எண் 92வது வாக்குச்சாவடியில் இருந்து, இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரத்தை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், விவிபேட் இயந்திரத்தில், 15 வாக்கு ஒப்புகைச்சீட்டு பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சமூக இடைவெளியை பின்பற்றி வாக்காளர்கள் வாக்களித்தனர். மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த வாக்குப்பதிவின் போது 220 பேர் வாக்களித்திருந்த நிலையில், மறுவாக்குப்பதிவில் 186 பேர் வாக்களித்துள்ளனர்.