IPL 2022: இந்திய அணி ஓபனராக ரிஷப் பந்த் இருக்க வேண்டும்- அகார்கர்

Rishabh Pant
இந்திய அணி ஓபனராக ரிஷப் பந்த் இருக்க வேண்டும்

IPL 2022: இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டி நாளை பகல் 1:30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் துவங்கவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, தென்னாப்பிரிக்க தொடரில் மிடில் வரிசை சொதப்பியதுபோல், மீண்டும் சொதப்பக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, அதற்காக திட்டங்கள் வகுத்து தயாராகி வருகிறது. மிடில் வரிசையில் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் சிறப்பாக சோபித்தால், பல போட்டிகளில் சொதப்பிவிடுகிறார். இதன்காரணமாகத்தான், மிடில் வரிசையின் பலர் குறைந்ததுபோல் இருக்கிறது. இதனால், மீண்டும் கே.எல்.ராகுலை மிடில் வரிசைக்கு அனுப்ப வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராகுலை மிடில் வரிசைக்கு கொண்டுவர வலுவான காரணமும் இருக்கிறது. அவர் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை மொத்தம் 10 போட்டிகளில் மிடில் வரிசையில் களமிறங்கி, 69.25 சராசரியுடன் 4 அரை சதங்கள் உட்பட 554 ரன்களை குவித்துள்ளார். இதனால்தான், இவரை இனியும் ஓபனராக களமிறக்க கூடாது என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவர் ஓபனராக களமிறங்கும் நேரங்களில்தான் சொதப்பி வருகிறார். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்கூட ஓபனராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும் மிடில் வரிசையில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, ராகுல் மிடில் வரிசையில் களமிறங்குவதுதான். அப்படி களமிறங்கினால், நிச்சயம் இந்தியாவின் மிடில் வரிசை பலமாக மாறும். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் அஜித் அகார்கரும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளார். “கே.எல்.ராகுல் ஓபனரா இல்லை மிடில் வரிசை வீரரா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பலமான மிடில் வரிசை வீரர் ஒருவர் ஓபனராக களமிறங்கி சொதப்புவது ஏமாற்றமாக உள்ளது. துவக்க வீரராக களமிறங்க ராகுலை தவிர பலர் இருக்கிறார்கள்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்திய அணியில் அதிரடி துவக்க வீரர்கள் வேண்டும் என்றால் இஷான் கிஷன், ரிஷப் பந்த் ஆகியோரை ஓபனர்களாக களமிறக்குங்கள். பவர் பிளேவில் இவர்களால் அதிக ரன்களை குவிக்க முடியும். இந்தியாவுக்கும் நல்ல துவக்கம் கிடைக்கும். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கும் நல்லதுதான்” எனக் கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, கே.எல்.ராகுல் தனது தங்கையின் திருமண விழாவில் கலந்துகொள்ளவுள்ளதால், இரண்டாவது போட்டிமுதல் மட்டுமே அணியில் இணைந்துகொள்வார். மேலும், ராகுல் ஒருவேளை மிடில் வரிசைக்கு வரும் பட்சத்தில், ரிஷப் பந்த் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால், ரிஷப் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chris Cairns: நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு குடல் புற்றுநோய்