சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அ.தி.மு.க. தொடங்கியது.

பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க., தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக, தேமுதிக உடன் இழுபறி உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.