TN fishermen: நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

tn fishermen
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

TN fishermen: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்பவருடைய பைபர் படகில் பன்னீர்செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் நாகமணியின் படகில் ஏறி புஷ்பவனம் மீனவர்களை ரப்பர்கட்டை, இரும்புபைப் வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

பின்னர், 300 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை அறுத்துக் கொண்டு ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, கடலில் மீன்இருக்கும் இடத்தை காண்பிக்கும் கருவி பறித்துக்கொண்டு, படகில் இருந்து டீசல் கேன்களை கடலில் தூக்கி வீசிவிட்டு மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டி அடித்தனர்.

காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசாரும் மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தி மீன்கள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த மாதம் நாகை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் மீனவர்களிடடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: corona in parliament: நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா