Murder: மகளிடம் அத்துமீறிய கணவரை கொன்ற மனைவி!

மகளிடம் அத்துமீறிய கணவரை கொன்ற மனைவி
மகளிடம் அத்துமீறிய கணவரை கொன்ற மனைவி

Murder: சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (43). இவரின் மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். பிரதீப், குடிபழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் எந்த வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்துவந்திருக்கிறார். அந்த வகையில், வழக்கம் போல நேற்று இரவும் பிரதீப், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து பெற்ற மகளிடம் பிரதீப் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பிரீத்தா, கணவரைக் கண்டித்தார். போதையிலிருந்த பிரதீப், மகளுக்கு தொல்லைக் கொடுப்பதை நிறுத்தவில்லை. அதனால் கணவரிடமிருந்து மகளை மீட்க பிரீத்தா போராடினார். கணவரைக் கண்டித்த பிரீத்தா, வீட்டின் சமையலறைக்குச் சென்றார்.

அங்கிருந்து சுத்தியலை எடுத்துவந்த பிரீத்தா, இறுதியாக கணவரைக் கண்டித்தார். அதை பிரதீப் காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கணவரின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்தார். அதில் பிரதீப்பின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து கணவரைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினரிடம் பிரீத்தா உதவி கேட்டார். மேலும், பிரீத்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக பிரீத்தாவிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதீப்பின் மகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப்பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Hockey Women’s Asia Cup 2022: ஹாக்கி மகளிர் ஆசிய கோப்பை 2022 இந்தியாவுக்கு வெண்கலம் !