Supreme Court: சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலின் பேச்சு

Supreme court: சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 9 அடுக்கு நிர்வாக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

இதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வரவேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. உயர்நீதி மன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள நிலத்தை அரசு வழங்கியுள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், 9 அடுக்கு மாடி நிர்வாக கட்டிடத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் வணிக நீதிமன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், கொரோனா காலத்தில் உயிரிழந்த வக்கீல்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்று இன்றோடு 3 ஆண்டு நிறைவு பெறக்கூடிய வகையில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இன்று ஓராண்டு முடிகிறது. எனக்கு அடுத்தமாதம் 7-ந் தேதி ஓராண்டு முடிவடைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் எனது தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்குபெறக்கூடிய முதல் விழா இந்த விழா. அப்படிப்பட்ட இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

சட்டத்தின் ஆட்சியை சமூகநீதியின் ஆட்சியை நீதி நெறிமுறைகளையும், விதி முறைகளையும் முறையாக பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய வழிமுறையே எந்நாளும் எங்களை வழி நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது பெருமைக்குரிய வகையில் அமைந்திருக்கிறது. அவரோடு நானும் இந்த விழாவில் பங்கேற்றதை நான் பெருமையாக கருதுகிறேன்.

சட்டத்தின் குரலாக மட்டுமல்ல மக்களின் குழுவாகவும் பல நேரங்களில் ஒலிக்கக்கூடிய வராக நமது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் பொன்னாபுரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் உயர்ந்து நிற்க காரணம் இந்திய மக்களின் மனசாட்சியின் குரலாக அவர் இருப்பது தான்.

அதனால் தான் அவர் தீர்ப்புகளிலும், தலைமை நீதிபதி என்ற வகையில் பங்கேற்று ஆற்றக்கூடிய உரைகளிலும் ஒலிக்கிறது.

ஜனநாயகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நீதிபதியான இவர் தற்போது நம் நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையை பெற்றவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பாராளுமன்றம், சட்டமன்றம், நீதி மன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை உணர்வுகளை பிரதி பலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும்.

நமது தலைமை நீதிபதி அப்படித்தான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் எடுத்துக்கூற முடியும். அனைத்து சட்டங்களும் நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதுணையாக இருக்ககூடிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்த விழாவுக்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதித் துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு சென்று அங்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கக் கூடியவர்களாக நீதிபதி ராமசுப்பிரமணியம், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: Kidney: சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மாசு’

இத்தகைய நீதிபதிகள் வீற்றிருக்கக்கூடிய இந்த அவையில் உரையாற்றுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

நாகரீக சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், மறுமலர்ச்சிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித் துறை தேவை என்பதை நமது அரசியல் அமைப்பு உறுதி செய்கிறது.

அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் விரைவில் நீதி கிடைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் சார்நிலை நீதிமன்றங்களுக்கு 64 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிபதி நிலையில் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது.

அதுமட்டுமல்ல 3 வணிகவியல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதிதாக சார்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நீதித் துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கி வரக்கூடிய கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்த கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

காரைக்குடியில் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை நீதித்துறைக்கு தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்கறிஞர்கள் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழக்கறிஞர்களின் கோரிக்கைகையான தமிழ் நாடு வழக்கறிஞர்கள் நலநிதி மூலம் வழங்கப்படும் சேமநல நீதியானது ரூபாய் 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு கொரோனா பெருந்தொற்றால் உயரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையை மாநில அரசு விரைவில் வழங்கும்.

இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14-ந்தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ர வளாகத்துக்குள் இயங்கிவரக் கூடிய பல்வேறு நீதிமன்றங்களை ஒரு புதிய 9 மாடி கட்டிடத்தில் அமைக்கக்கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பல்வேறு நீதி மன்ற கட்டிடங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-ந்தேதி அன்று 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கட்டிடம் அமைந்தால் நீதித்துறை உள்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தியாகும் என்பதில் ஐயமிலை.

இந்த தருணத்தில் நீதித் துறையே இங்கு வந்து முழுமையாக வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி உயர்நீதி மன்றத்திம் வழக்காடும் மொழியாக ஆக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதி மன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் ஆகிய இந்த 3 கோரிக்கைகளை இங்கு வந்துள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர்களுக்கு முன்பு நம் அனைவரின் சார்பாக நான் விடுத்திருக்கின்றேன்.

நம் மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதியரசரும், தமிழ் நாட்டில் இருந்து டெல்லி சென்று உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக செயலாற்றக் கூடிய நிதியரசர்களும் அதற்கு துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: Punjab: 184 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்