ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

விஜய்யின் சர்கார் படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது 2018ம் ஆண்டு 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சர்கார் . இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில் கடந்த 2018 ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று ஏற்கனவே அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. திரைப்படங்களை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என கூறி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த வழக்கு போடப்பட்டுள்ளதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, திரைப்படத்தை தணிக்கை செய்த பிறகு அதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு என கூறி ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.