தினமும் ரூ.40 கோடிக்கு ‘முககவசம்’ விற்பனை

கொரோனாவை அண்ட விடாமல் பாதுகாக்க முக கவசம் அவசியமாகிவிட்டது. அதிலும் 2-வது அலை வீரியத்துடன் வேகமாக பரவி வருவதால் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. ஏனெனில் தினமும் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவாகிறது என்பதால் அந்தமாதிரி முககவசத்தை வாங்கி பயன்படுத்த தயங்குகிறார்கள்.

ஆனால் ஆஸ்பத்திரிகள், சுகாதார பணிகளில் ஈடுபடுபவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் முககவசத்தையே பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சுமார் 10 லட்சம் முககவசங்கள் விற்பனையாகிறது. சுமார் ரூ.40 கோடி வரை வியாபாரம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

‘நோஸ்பின்’னுடன் கூடிய 3 முதல் 5 அடுக்கு வரை உடைய முககவசங்கள் மொத்த விலைக்கு ரூ.2 முதல் ரூ.3½ வரை விற்கப்படுகிறது. இதுவே சில்லரை விலைக்கு ஒரு மாஸ்கின் விலை ரூ.10 வரை விற்பனையாகிறது.

இவை தவிர ஆன்-லைனிலும் பல ரகங்களில் முக கவசங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் முககவசங்கள் ஒரு பண்டல் ரூ.299 முதல் 569 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர என்-95 மற்றும் காட்டன் துணியால் ஆன முககவசங்களும் பல வண்ணங்களில் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்-லைன் விற்பனை, மருத்துவ துறை பயன்பாடு, பொதுமக்கள் வாங்குவது ஆகியவை சேர்ந்து சுமார் 40 கோடி ரூபாய் விற்பனை நடப்பதாக கூறுகிறார்கள்.